×

மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல… தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்பனை செய்யப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல, அது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த மெத்தனால் என்ற விஷச்சாராயத்தை ஓதியூரை சேர்ந்த சாராய வியாபாரி அமரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், புதுச்சேரி ஏழுமலையிடமிருந்து இந்த விஷசாராயம் விநியோகம் ஆகியிருப்பது தெரிந்தது. சித்தாமூரில் விற்கப்பட்ட விஷச்சாராயமும், மரக்காணத்தில் விற்கப்பட்ட விஷச்சாராயமும் ஓரிடத்தில் இருந்து வந்தது என புலனாகிறது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 55,474 சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. கள்ளச்சாராய வழக்குகளில் ஈடுபட்ட 79 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது பெருமளவு தடுக்கப்பட்டதாலும், அண்டை மாநிலங்களுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படுவதாலும், சாராயம் கிடைக்கவில்லை என்ற சூழ்நிலையில், தொழிற்சாலையிலிந்து விஷச்சாராயத்தை திருடி சிலர் விற்றுள்ளனர். அதனால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. எந்த தொழிற்சாலையிலிருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வந்தது. அதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து புலன் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மரக்காணம், சித்தாமூரில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல… தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால்: டிஜிபி சைலேந்திரபாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Marakavam ,Sitamur ,DGB ,Silendra Babu ,Chennai ,Marakkana ,Sittamur ,Tamil Nadu Police ,Maraccam ,Dinakaran ,
× RELATED தவறு செய்யும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு