ராமநாதபுரம்: குடிநீர் வழங்கக் கோரி நயினார்கோயில் அருகே குணங்குளம் கிராம மக்கள் காலி குடங்களுடன், கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் டிஆர்ஓ கோவிந்த ராஜாலு தலைமையில் நடந்தது. இதில் நயினார்கோயில் ஒன்றியம், குணங்குளம் கிராமமக்கள் காலி குடங்களுடன் வந்து மனு அளித்தனர். இது குறித்து குணங்குளம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தமாள் மற்றும் பெண்கள் கூறுகையில், ஆட்டாங்குடி பஞ்சாயத்து, குணங்குளம் கிராமத்தில் சுமார் 75 குடும்பங்கள் உள்ளன. இங்கு காவிரி கூட்டு குடிநீர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வரவில்லை.
இதனால் குடிப்பதற்கு டேங்கர் தண்ணீரை விலைக்கு வாங்கியும், மற்ற பயன்பாட்டிற்கு குளத்து தண்ணீரையும் பயன்படுத்தி வந்தோம், தற்போது கோடை காலம் என்பதால் குளத்தில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அனைத்து பயன்பாட்டிற்கும் தண்ணீரின்றி அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று, அங்கு வரும் காவிரி கூட்டு குடிநீரை பிடித்து தள்ளுவண்டியில் குடங்களை வைத்து தள்ளிக்கொண்டு வந்து பயன்படுத்தி வருகிறோம். எனவே குணங்குளம் கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post குடிநீர் கோரி காலி குடங்களுடன் வந்து பெண்கள் மனு appeared first on Dinakaran.