×

தொழிலதிபரை கடத்திய வழக்கில் திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் அதிமுக மாஜி எம்எல்ஏ சரண்: காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவு

திருவில்லிபுத்தூர்: தொழிலதிபரை கடத்திய வழக்கில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சாத்தூர் தொகுதி அதிமுக மாஜி எம்எல்ஏ ராஜவர்மன் நேற்று காலை சரணடைந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன். இவர், தனது நண்பர்கள் சிலர் மற்றும் ரவிச்சந்திரன் என்பவருடன் சேர்ந்து, கடந்த 2018ல் பட்டாசு ஆலை தொடங்கினார். இதன்பிறகு ராஜவர்மனும், அவரது நண்பர்களும் தங்களால் தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை எனக்கூறி, பங்குத் தொகையை பிரித்து வாங்கிக் கொண்டனர். ரவிச்சந்திரன் மட்டுமே பட்டாசு ஆலையை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ராஜவர்மன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து போலியான ஆவணங்களை தயாரித்து, ரவிச்சந்திரனிடம் இன்னும் நாங்கள் பங்குதாரராக உள்ளோம். எங்களுக்கு உரிய பங்கை பிரித்து கொடுக்க வேண்டும் என மிரட்டியதாக தெரிகிறது. இதற்கு ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜவர்மன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ரவிச்சந்திரனை திருவில்லிபுத்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்து, அடித்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு திருவில்லிபுத்தூர் பகுதியில் அப்போது பணிபுரிந்த 2 காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் மனுத்தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் மற்றும் தங்கமுனியசாமி (30), மற்றொரு ரவிச்சந்திரன் (53), அங்காளஈஸ்வரி (50), முத்துமாரியப்பன் (54), சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜவர்மன், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில் நேற்று காலை திருவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் பொறுப்பு நீதிபதி திருநாவுக்கரசு முன்னிலையில் ராஜவர்மன் சரணடைந்தார். சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, மறு உத்தரவு வரும் வரை திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு ராஜவர்மன் கையெழுத்து போட உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தொழிலதிபரை கடத்திய வழக்கில் திருவில்லிபுத்தூர் கோர்ட்டில் அதிமுக மாஜி எம்எல்ஏ சரண்: காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Maji MLA ,Saran ,Tiruviliputtur Court ,Thiruvillyputtur ,Sattoor ,Maji MLA Rajwarman ,Thiruvillyputtur court ,Maji MLA Saran ,Thiruviliputtur Court ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு