×

பழநி, ஒட்டன்சத்திரத்தில் விளைநிலங்களில் காட்டுயானைகள் அட்டகாசம்: தென்னை, மா மரங்களை சாய்த்து சேதம்

பழநி: பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். அவற்றை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி, ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்கு உட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி, அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனில்லை. மழை பெய்ததன் காரணமாக பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியை அடுத்துள்ள கிராமங்களில் தற்போது கரும்பு, மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.

அவை உணவு தேடி வனப்பகுதி எல்லைகளை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடும் அபாயம் நிலவுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதற்கிடையே, ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைபட்டி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த யானைக்கூட்டம் துரைராஜ் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப்பயிர்கள், மா, தென்னை மரங்களை சேதப்படுத்தின. எனவே வனத்துறை அதிகாரிகள் யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோம்பைபட்டியை சேர்ந்த விவசாயி துரைராஜ் கூறும்போது, ‘‘எங்கள் விவசாய பகுதிக்குள் காட்டு யானைகள் அதிகளவு வருகின்றன. சில சமயம் கூட்டமாகவும், சில முறை ஒற்றையாகவும் வந்து தொல்லை தருகின்றன. பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்துகின்றன. வனத்துறையினர் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். சேதமடைந்த பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

The post பழநி, ஒட்டன்சத்திரத்தில் விளைநிலங்களில் காட்டுயானைகள் அட்டகாசம்: தென்னை, மா மரங்களை சாய்த்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Bharani ,Paranani ,Otansashram ,Otensaca ,
× RELATED 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவம் படமாகிறது