×

கள்ளச்சாராயம் குடித்த பெண் உட்பட 6 பேர் பலி: 2 இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ சஸ்பெண்ட்

* இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மரக்காணம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்து உள்ளனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், 2 இன்ஸ்பெக்டர் மற்றும் 2 உதவி ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் அமரன் (25), கள்ளச்சாராய வியாபாரி. இவர் புதுவை மாநிலத்திலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்றுள்ளார். இவர் விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் சங்கர் (55), தரணிவேல் (50), ராஜமூர்த்தி (60), சுரேஷ் (60), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (61), மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு சென்று அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கர், சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து தரணிவேல், ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி ஆகியோர் நேற்று இறந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மலர்விழி (60)என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் மரக்காணம் போலீசார், சாராய வியாபாரி அமரனை கைது செய்தனர். அவரோடு கூட்டு சேர்ந்து தொழில் செய்து முத்து (31), ஆறுமுகம் (42), மண்ணாங்கட்டி (50), ரவி (50) ஆகியோரை தேடி வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனையை கண்டித்து, எக்கியர்குப்பத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மரக்காணம் பூமீஸ்வரர் கோயில் அருகே இசிஆர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் பழனி, எஸ்.பி. நாதா ஆகியோர் சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர் , தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவழகன், உதவிஆய்வாளர் தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

 

The post கள்ளச்சாராயம் குடித்த பெண் உட்பட 6 பேர் பலி: 2 இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Marakanam ,SI ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...