×

வெயில் கோர தாண்டவம் தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று வெயில் கோர தாண்டவம் ஆடியது. இதனால், 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது. அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு 105 டிகிரி அடித்ததால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். மாலையில் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகம் முழுவதும், கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. அதிலும் குறிப்பாக ஈரோடு, கரூர், வேலூர், சேலம், தர்மபுரி, மதுரை, திருத்தணி, திருப்பத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் வெயிலின் உக்கிர தாண்டவம் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 104 டிகிரி வரை வெயில் பதிவானது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று வெயிலின் கோர தாண்டவம் என்பது மிக, அதிகமாக இருந்தது. இதனால், தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் நேற்று 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 106.7 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அதற்கு அடுத்தபடியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 105.26 டிகிரி வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 105.08 டிகிரி, கரூர் பரமத்தி 104 டிகிரி, திருத்தணி 103.64 டிகிரி, மதுரை விமான நிலையம் 103.64 டிகிரி, மதுரை நகரம் 102.92 டிகிரி, ஈரோடு 102.92 டிகிரியாக பதிவாகி இருந்தது. திருச்சி 102.74 டிகிரி, தஞ்சாவூர் 102.2 டிகிரி, கடலூர் 101.12 டிகிரி, நாகப்பட்டினம் 100.76 டிகிரி, பரங்கிப்பேட்டை 100.58 டிகிரி என 13 இடங்களில் வெயில் சதத்தை கடந்தது. மேலும் புதுச்சேரியில் 101.84 டிகிரி வெயில் பதிவானது. வெயிலின் உக்கிரதாண்டவத்தால் தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக சென்னையில் 105.26 டிகிரி வரை வெயில் அடித்து விளாசியது. நடப்பாண்டில் முதல் முறையாக சென்னையில் இந்த அளவுக்கு நேற்று தான் பதிவாகியிருந்தது. இதனால், சென்னையில் நேற்று காலை 10 மணிக்கு மேல் வெயிலின் உக்கிரம் என்பது மிக அதிகமாக இருந்தது. சிறிது தூரம் நடந்தாலே உடல் முழுவதும் வியர்க்கும் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. தலையே சுற்றும் அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது. வெயிலின் தாக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக இருந்ததால் காலை 10 மணிக்கு மேல் சென்னைவாசிகள் அத்தியாவசிய தேவையை தவிர மற்றபடி வெளியே செல்வதை தவிர்த்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்த போதிலும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். அதே நேரத்தில் வீட்டில் உள்ள மின் விசிறிகள் வெப்ப காற்றை அள்ளி வீசியது. மதிய நேரத்தில் வெளியில் மக்கள் நடமாட வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் வேறு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், பிற்பகல் வேளையில் சென்னையில் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் என்பது மிக,மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

வெயிலின் கொடுமையால் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் வீடுகளில் முடங்கியிருந்த மக்கள் மாலை 4 மணிக்கு மேல் வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு இயற்கை காற்றை சுவாசிக்கவும் சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதியை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக படையெடுக்க தொடங்கினர். இதனால், மாலை 4 மணி முதல் கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மாலை 6 மணிக்கு மேல் மக்கள் வெள்ளமாக கடற்கரை, பூங்காக்கள் காட்சியளித்தன. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து பொழுதை போக்கினர். அங்கேயே வீட்டில் இருந்து சமைத்து கொண்டுவரப்பட்ட உணவுகளை குடும்பத்துடன் சாப்பிட்டு இரவு வரை பொழுதை போக்கினர். இதனால் இரவு 9 மணி வரை கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பழங்கள், குளிர்பானங்கள் விற்பனையும் களைக்கட்டியிருந்தது. இதேநிலைதான் தமிழகம் முழுவதும் நேற்று கடற்கரை, பூங்காக்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

 

The post வெயில் கோர தாண்டவம் தமிழ்நாட்டில் 13 இடங்களில் சதம் appeared first on Dinakaran.

Tags : Vail Kora Thandavam ,Tamil Nadu ,CHENNAI ,Thandavam ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...