சென்னை: முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேரை பலிகொண்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சான்று ஆவணங்கள் கிடைக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் 8ம் தேதி, இந்திய விமானப்படையின் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 14 பேர் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முப்படை விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுத்ரி மற்றும் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. விசாரணையின் முடிவுகளை அந்த குழு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்தது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. இந்த நிலையில், குன்னூர் போலீசும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விபத்து நடந்த அன்று இருந்த வானிலை அறிக்கை, ஹெலிகாப்டரில் உள்ள டேட்டா ரிகார்டர், காக்பிட் வாய்ஸ் ரெகார்டர் போன்ற ஆவணங்கள் இதுவரை குன்னூர் போலீசுக்கு வழங்கப்படாததால் விசாரணை நிலுவையிலேயே உள்ளது.
The post பிபின் ராவத் உள்ளிட்டோரை பலிகொண்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்து வழக்கு: ஆவணங்கள் இல்லாததால் நிலுவையில் விசாரணை; குன்னூர் போலீஸ் வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.