×

ஸ்ரீமுஷ்ணம் அருகே சோகம்; கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 பேர் பரிதாப பலி

ஸ்ரீமுஷ்ணம்:ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் ஊராட்சி, மாஞ்சாலை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (40). இவர் புதிதாக வீடு கட்டியுள்ளார். வீட்டின் பின்புற பக்கவாட்டில் புதிதாக 10 அடி ஆழம் கான்கிரீட்டால் ஆன கழிவுநீர் தொட்டி கட்டியுள்ளார். 20 நாட்கள் கழித்து அதன் ஒரு பகுதியில் உள்ள கான்கிரீட் கட்டைகளை பிரித்துள்ளனர். இப்பணியில், வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, சின்னகானூரை சேர்ந்த பாலசந்திரன்(32), கிருஷ்ணமூர்த்தி உறவினர் தலைவாசல் பகுதியை சேர்ந்த சக்திவேல்(22) ஆகிய மூவரும் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்களின் சத்தம் கேட்காததால், கிருஷ்ணமூர்த்தி தாயார் வந்து பார்த்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றபோது, அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை, ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வந்து தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து 3 பேரையும் மீட்டனர். அதற்குள் மூன்று பேரும் இறந்து விட்டது தெரியவந்தது. இதில் பாலசந்தருக்கு 8 மாதங்களுக்கு முன் தான் திருமணமாகி உள்ளது. அவரது மனைவி அம்மன்ராணி கர்ப்பிணியாக உள்ளார்.

The post ஸ்ரீமுஷ்ணம் அருகே சோகம்; கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Srimushnam ,Krishnamurthy ,Manjalai Street, Kannur Panchayat ,
× RELATED ஸ்ரீமுஷ்ணம் கோயிலுக்குள் கார் பாய்ந்ததால் பரபரப்பு..!!