×

34 ஆண்டுகளுக்கு பின் கர்நாடகாவில் காங். சாதனை வெற்றி; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது: பா.ஜ, மஜத படுதோல்வி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. ஆளும் பாஜவுக்கு 65 மற்றும் மஜதவுக்கு 19 தொகுதியில் வெற்றி கிடைத்தது. சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி மற்றும் 12 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர். கர்நாடகா சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் 24ம் தேதி முடிகிறது. 16வது சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. பாரதிய ஜனதா கட்சி 224, காங்கிரஸ் 223, மஜத 207, ஆம் ஆத்மி 219 வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். மொத்தம் 5,30,85,566 வாக்காளர்களில் 3,88,51,807 பேர் வாக்களித்தனர். 73.19 சதவீத வாக்கு பதிவாகி இருந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு பெங்களூருவில் உள்ள பத்து மையங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 34 மையங்களில் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் பாஜ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் சம பலத்தில் வாக்குகள் பெற்றனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் காங்கிரஸ 100க்கும் மேற்பட்ட தொகுதியில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பின், மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 136 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. 1989ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 178 இடங்களை கைப்பற்றியது. அதன் பின் 34 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு பெரிய வெற்றியை தற்போது காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா 65 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முன்னாள் அமைச்சர் ஜனார்தனரெட்டி கட்சியான கேஆர்பிபி 1 தொகுதியிலும் கர்நாடக விவசாய சங்கம் 1 இடத்திலும் வெற்றி பெற்றது, சுயேச்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர்.

தலைவர்கள் வெற்றி: தேர்தலில் முதல்வர் பசவராஜ்பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.எச்.முனியப்பா, முன்னாள் துணைமுதல்வர் டாக்டர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், சாமனூர் சிவசங்கரப்பா, ஈஸ்வர்கண்ட்ரே, எச்.டி.ரேவண்ணா , ராமலிங்கரெட்டி உள்பட பலர் வெற்றி பெற்றனர்.
12 அமைச்சர்கள் வெற்றி: முதல்வர் பசவராஜ்பொம்மை தலைமையிலான அரசில் முதல்வர் உள்பட 25 பேர் அமைச்சரவையில் இருந்தனர். இதில் 12 அமைச்சர்கள் வெற்றி பெற்றனர்.

12 அமைச்சர்கள் தோல்வி: சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி (சிர்சி), அமைச்சர்கள் சங்கர் மூனனேகொப்பா ( நவலகுந்தா), ஹாலப்பா ஆச்சார் (யலபுர்கா), வி.சோமண்ணா (வருணா மற்றும் சாம்ராஜ்நகர்), கோவிந்த கார்ஜோள் (முத்தோள்), பி.ஸ்ரீராமுலு (பல்லாரி ஊரகம்), ஜே.சி.மாதுசாமி (சிக்கநாயகனஹள்ளி), சி.சி.பாட்டீல் (நரகுந்தா), முருகேஷ் நிரானி( பீளகி).டாக்டர் சுதாகர் (சிக்கபள்ளாபுரா), எம்.டி.பி.நாகராஜ் (ஒசகோட்டை), கே.சி.நாராயணகவுடா (கே.ஆர்,பேட்டை), பி.சி.நாகேஷ் (திப்டூர்) ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம்: கர்நாடகாவில் பெரு வெற்றி பெற்றது, காங்கிரஸ் தொண்டர்கள் இடையில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கட்சி தொண்டர்கள் வெற்றி விழா கொண்டாடினர்.பாஜ மற்றும் மஜத அலுவலகம் வெறிச்: சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி படுதோல்வி சந்தித்ததால், இரு கட்சிகளின் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கட்சி அலுவலகத்திற்கு தலைவர்கள் மட்டுமில்லாமல், தொண்டர்களும் வரவில்லை. தோல்வியை சகித்து கொள்ள முடியாமல் சோகத்தை வெளிப்படுத்தினர்.

இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம், தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ராஜினாமா: கர்நாடக மாநில தேர்தலில் பாஜ படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜ்பவன் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் கெலாட், புதிய ஆட்சி அமையும் வரை அவரை காபந்து முதல்வராக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். பசவராஜ் பொம்மை 2021 ஜூலை 28ம் தேதி பதவியேற்றார். இவர் மொத்தம் 19 மாதம் 7 நாள் முதல்வர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் முதல்வர்?: காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றுள்ளதால், கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகிய இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி மட்டுமின்றி ஆவலும் கட்சி தொண்டர்களிடம் அதிகரித்துள்ளது. அதேபோல் அமைச்சரவையில் இடம் பிடிக்க மூத்த எம்எல்ஏக்கள் இப்போதே தங்கள் காட் பாதர்கள் மூலம் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

‘பாஜ இல்லாத தென்னிந்தியா’ காங். இல்லாத இந்தியாவை விரும்பியவர்களுக்கு பதிலடி: தேர்தல் வெற்றிக்குப் பின் பேட்டி அளித்த காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை விரும்பியவர்கள் எங்களுக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் இன்று ஒன்று உண்மையாகி விட்டது. அதுவே, ‘பாஜ இல்லாத தென்னிந்தியா’. இனியும் அகங்கார பேச்சுகள் உதவாது. மக்களின் துன்பத்தை அவர்கள் (பாஜ) புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகாவில் வெற்றி யாருடைய தனிப்பட்ட வெற்றியும் அல்ல. இது நமது கூட்டு முயற்சி, ஒற்றுமைக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. இதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்றார்.

கர்நாடகா மக்களுக்கு நன்றி கூறிய அமித்ஷா: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘பல ஆண்டுகளாக பாஜவுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த கர்நாடக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கர்நாடக மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பாஜ தொடர்ந்து பாடுபடும்’ என பதிவிட்டுள்ளார்.

92 வயது மூத்த எம்எல்ஏ: காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாவணகெரே தெற்கு தொகுதியில் சாமனூர் சிவசங்கரப்பா தான் பேரவை பொது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களிலேயே அதிக வயதானவர். இவருக்கு 92 வயது. இவர் வெற்றி பெற்றுள்ளார். அதிக வயதான எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.

The post 34 ஆண்டுகளுக்கு பின் கர்நாடகாவில் காங். சாதனை வெற்றி; தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது: பா.ஜ, மஜத படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Majtha ,Bengaluru ,Congress ,Pa. Ja ,Mazatha ,
× RELATED பாலியல் வழக்கில் சிக்கியதால்...