×

வேதாரண்யத்தில் 3வது நாளாக 500 அடி தூரம் கடல் உள்வாங்கியது

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் 3வது நாளாக இன்று 500 அடி தூரம் கடல் உள்வாங்கியது. 8வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில், வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள மோக்கா புயல் காரணமாக கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 8வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

நேற்று முன்தினம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து வேதாரண்யம் சன்னதி கடல் வரை சுமார் 100 அடி தூரம் கடல்நீர் உள்வாங்கி காணப்பட்டது. நேற்றும் கடல் உள்வாங்கியது. இந்த நிலையில் இன்று 3வது நாளாக வேதாரண்யம் கடற்கரையில், கடல் நீர் சுமார் 500 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலில் உள்ள சகதி வெளியே தெரிகிறது. வழக்கமாக கடல் உள் வாங்குவதும் பின்பு வெளி வருவதும் தொடர்ந்து நடைபெற்றாலும், தற்போது அதிக தூரம் கடல் நீர் உள்வாங்கி இருப்பது கடலில் ஏற்பட்டுள்ள மோக்கா புயல் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

The post வேதாரண்யத்தில் 3வது நாளாக 500 அடி தூரம் கடல் உள்வாங்கியது appeared first on Dinakaran.

Tags : Vedarnayya ,Vedaranya ,Dinakaran ,
× RELATED கோடை மழை 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிப்பு