×

கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

வருசநாடு : தேனி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது மூல வைகை ஆறு. இப்பகுதியில் 1984ம் ஆண்டு மூல வைகை அணை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வாலிப்பாறை மலைப்பகுதிக்கு இடைப்பட்ட மலைக்கிராம பகுதிகளில் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. அப்போதிருந்த அதிமுக ஆட்சி இத்திட்டத்திற்காக முன்னெடுப்பு பணிகள் எதுவும் எடுக்காததால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் மூல வைகையாற்றில் கழிவுநீர் கலப்பதால் குடிநீர் மாசடைகிறது. இதனை தடுக்க கரையோர கிராமங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகையாறு உற்பத்தியாகிறது. வருடத்தின் பெரும்பாலான மாதங்களில் மூல வைகையாற்றில் நீர்வரத்து காணப்படும். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மூல வைகையாறு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

மேலும் மூல வைகையாற்றை சார்ந்து ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் வாலிப்பாறை, தும்மக்குண்டு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம் சிங்கராாஜபுரம். தர்மராஜபுரம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அனைத்தும் மூல வைகையாற்றில் கலந்து வருகிறது.

தற்போது கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் கன மழை பெய்து நீர் வரத்து ஏற்படுகிறது அதனுடன் கழிவுநீரும் சேர்ந்து விடுகிறது. இதனால் குடிநீர் மாசடைகிறது. இந்த கழிவுநீர் கலந்த குடிநீரை குடிப்பதால் பொதுமக்களுக்கு டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே மூல வைகையாற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்காலிகமாக மூல வைகை ஆற்றில் உள்ள உறைகிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகமும் குடிநீர் வழங்குவதில் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் உறை கிணறுகளை தூர்வாரிய பின்பு குடிநீர் பஞ்சம் சிறிதளவு நீங்கியது. ஆனால் தற்போது கோடை மழை பெய்து வருவதால் இனி வரும் காலங்களில் குடிநீர் பஞ்சம் வராது என கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கடமலைக்குண்டு கிராமவாசிகள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளும் மூல வைகை ஆற்றுப்பகுதியை நம்பி உள்ளது. தற்பொழுது ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் குடிநீர் பஞ்சம் நீங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் வருகின்ற ஆற்று தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படாமல் வீணாகி வருகிறது. எனவே, தண்ணீரை பாதுகாப்பதற்கும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘வருசநாடு பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் மலையும், மலை சார்ந்த 150க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது.
மேலும் மூல வைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பகுதியில் குடிநீர் சப்ளைக்கும், விவசாயத்திற்காகவும் புதியதாக மூல வைகை அணை கட்ட வேண்டும்.’’ என்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகை ஆற்றில் பல இடங்களில் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால் மட்டும் நிரந்தர குடிநீர் பஞ்சம் வராது. இதற்கு தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். வைகை ஆற்றில் மாசடையும் பகுதிகளில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.

மாவட்ட கலெக்டர் கவனிப்பாரா?

வருசநாடு மக்கள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலைகளை காக்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் ஆமை வேகத்தில் இருந்தது, தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருகிறது. கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி பகுதிகளில் பல கண்மாய்கள் உள்ளது.

இந்த கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து கால்வாய் அமைத்து தண்ணீரை கொண்டு சென்றால் இப்பகுதிகளில் எப்போதும் குடிநீர் பஞ்சம் வராது. இதற்கு பல முறை அதிமுக அரசிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post கடமலைக்குண்டு மூல வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaigai ,Kadamalakku ,Vaiga ,Theni ,Vaigai River ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை...