×

உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கணவன், மனைவி பலி-மேல்மலையனூரை சேர்ந்தவர்கள்

கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய கணவன், மனைவி பரிதாபமாக இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகா மேல்அருங்குணம் ஊராட்சி புதூர் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(55), விவசாயி. இவரது மனைவி தங்கமணி(47). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், தம்பதி இருவரும் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். நிகழ்ச்சி முடிந்த பிறகு நேற்று முன்தினம் இரவு இருவரும் மீண்டும் வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது, கீழ்பென்னாத்தூர் சந்தைமேடு பைபாஸ் பகுதியில் வந்தபோது எதிரே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரி, இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் பலத்த காயமடைந்த தம்பதி இருவரையும் அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி தம்பதி இருவரும் நள்ளிரவு அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப்பதிந்து லாரி டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் கணவன், மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி கணவன், மனைவி பலி-மேல்மலையனூரை சேர்ந்தவர்கள் appeared first on Dinakaran.

Tags : Pali-Melmalayanur ,Kilibennathur ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...