
பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் ஆளும் பாஜ 224, எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223, மஜத 207 உட்பட மொத்தமாக 2613 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமைச்சர் சோமண்ணா களமிறக்கப்பட்டுள்ளார். மஜத தலைவர் குமாரசாமி சென்னபட்ணா தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர்.
டி.கே.சிவகுமாரை எதிர்த்து அமைச்சர் ஆர்.அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், பாஜ, மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 34 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னணி நிலவரம் வெளியானதும் காலை 10 மணி அளவில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.
The post ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?.. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது..! appeared first on Dinakaran.