×

ஆவடியில் மாயமான தனியார் ஊழியர் ஏரியில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை

பூந்தமல்லி, மே 13: ஆவடியில் மாயமான தனியார் ஊழியர் செம்பரம்பாக்கம் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். செம்பரம்பாக்கம் ஏரியில் 5 வது மதகு பகுதியில் ஆண் சடலம் ஒன்று மிதந்து கொண்டிருப்பதாக நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து போன நபர் ஆவடி, கோவில்பதாகை, பாரதி நகரை சேர்ந்த விக்னேஷ்வர்(28), என்பதும் இவர் பெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் அவர் தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும் அந்த பெண் இவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று செம்பரம்பாக்கம் ஏரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தவர், மோட்டார் சைக்கிளை ஏரி கரையின் மீது நிறுத்தி விட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரத்தில் மர்ம நபர்கள் இவரை அடித்து கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசி விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சடலமாக மீட்கப்பட்ட விக்னேஷ்வரை காணவில்லை என இவரது பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து. இறந்து போன விக்னேஸ்வர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post ஆவடியில் மாயமான தனியார் ஊழியர் ஏரியில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Poontamalli ,Chembarambakkam lake ,Sembarambakkam ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...