நெல்லை: பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பை பகுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கில் ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அம்பை, கல்லிடை, விகேபுரம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது தீவிர குற்ற தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி சங்கர் தலைமையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, விகேபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக 24 போலீசாரை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் கோடை விடுமுறைக்கு பின் மாணவ, மாணவிகளை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் போலீசாருக்கு வழங்கப்படும் வழக்கமான பணியிடமாற்றம் தான் எனவும், இதுவரை 360 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
The post பற்களை பிடுங்கிய விவகாரம் 24 போலீசார் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.