
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது. டெல்லி அதிகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,\\” மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களை ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நேற்று முன்தினம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தது.
இந்த நிலையில்,மேற்கண்ட விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக, டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘டெல்லி அரசின் அதிகாரிகள், செயலாளர்கள் மாற்றம் தொடர்பான நிர்வாக ஒப்புதல் வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இது எங்களது நடவடிக்கைக்கு முட்டுக் கட்டையாக உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது மட்டுமில்லாமல் அதனை அவமதிக்கும் செயலாகும்.
எனவே டெல்லி அரசு பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். அதே வேலையில் எங்களது நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது அவசர வழக்காக இன்றோ அல்லது நாளையோ உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு: உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் appeared first on Dinakaran.