×

அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்ந்த அலுவலர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இன்று (12.05.2023) சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ், வளாகத்தில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலத்தில், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கருத்தரங்கு கூடத்தில் தொழிலாளர் துறை சார்ந்த அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசானது, தொழிலாளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் வகையிலும், அனைத்து பிரச்சனைகளுக்கு முழுமையாக தீர்வு காணும் நோக்கத்திலும் செயல்படும் அரசாக இருந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் தொழிலாளர்களுக்கு புதிய நலத்திட்டங்களை அறிவித்து தொழிலாளர்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. மேலும், இக்கூட்டத்தில் தொழிலாளர் ஆணையரக செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். தொழிலாளர் துறை அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட கீழ்காணும் அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

தொழிலாளர் துறையின் கீழ் இயங்கும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் வாரிய உறுப்பினர்களை விரைவாக சென்று சேர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு அமைப்புசாரா தொழிலாளர் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படும் அரசு, எனவே தொழிலாளர் துறை அலுவலர்கள் அமைப்புசாரா வாரியங்களில் பெறப்படும் கேட்புமனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு காணவும், நிலுவை ஏதுமின்றி செயல்படவும், பதிவு புதுப்பித்தலிலும் நிலுவை இன்றி விரைந்து செயல்படவும் வேண்டும்.

தொழிலாளர் துறையின் செயல்பாடுகளான சமரசப் பணிகள், நீதிசார் பணிகள், சட்ட அமலாக்க பணிகள் போன்ற பணிகள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். தொழில் தகராறுகள் சட்டம், 1947, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947, குறைந்தபட்ச ஊதிய சட்டம், 1948, பணிக்கொடை பட்டுவாடா சட்டம், 1972, தோட்டத் தொழிலாளர்கள் சட்டம், 1951, சட்டமுறை எடையளவு சட்டம், 2009 மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பல்வேறு தொழிலாளர் நல சட்ட அமலாக்க பணிகளை துறை அலுவலர்கள் புகார்களுக்கு இடமளிக்காமல் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். அமலாக்க அலுவலர்கள் ஆய்வின் சமயம் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உரிய காலத்தில் வழங்கப்படுகிறதா என்பதனை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஆய்வின் போது வெளிமாநில தொழிலாளர்கள், தொழிலாளர் துறையின் வலைதளத்தில் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்களா என்பதனை உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

31.03.2023 அன்று மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கென மாநில அளவிலான ஆலோசனை குழு மற்றும் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மாநில மற்றும் மண்டல அளவிலான குழு கூட்டங்களை நிர்ணயிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் நடத்துமாறு அறிவுறுத்தினார். சமரச அலுவலர்கள் நாட்டில் தொழில் வளர்ச்சி மேம்படுத்தப்படுவதோடு, தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையிலும் தொழிலாளர் மற்றும் வேலையளிப்போர் இடையே நல்லுறவினை மேம்படுத்தும் வகையிலும் சிறப்பாக செயல்பட அறிவுறுத்தினார்.

மேற்கண்டவாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இக்கூட்டத்தில் முதன்மைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்ந்த அலுவலர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Minister ,CV Ganesan ,Department of Labor Welfare and Skill Development ,Chennai ,Labor Welfare and ,Development ,Labor Department ,Labor Welfare and Skill Development Department ,Dinakaran ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...