சென்னை: வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருத்தரிப்பு மையம் மற்றொரு தனியார் நிறுவனம் என 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் டிஜிட்டல் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கருத்தரிப்பு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்கு குழந்தை பேறுக்காக பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில், 2022-23ம் நிதியாண்டில் அந்த கருத்தரிப்பு மையம், முந்தையை ஆண்டை விட வருமானத்தை மிகவும் குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதைதொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த கருத்தரிப்பு மையம், உரிமையாளர் வீடுகளில் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வரவு செலவு கணக்குகள் பராமரிக்கப்பட்டு வந்த கணினிகள், பென் டிரைவ் உள்ளிட்ட டிஜிட்டல் ஆவணங்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கருத்தரிப்பு மையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களின் விலை பட்டியல் குறித்த ஆவணங்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதேபோல், சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள பாஷியம் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ஆதவா என்பருக்கு சொந்தமான வீட்டில் 7 பேர் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் சோதனையின் போது சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
மேலும், இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களிலும் நேற்று சோதனை நடந்தது. கருத்தரிப்பு மையம், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனை குறித்து முழு விவரங்களை வெளியிடவில்லை. சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட சொத்து மதிப்புகள் மற்றும் வரி ஏய்ப்பு குறித்து தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.
The post வருவாயை குறைத்து கணக்கு காட்டியதாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் வருமான வரி சோதனை: டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றி விசாரணை appeared first on Dinakaran.