×

வெளியே உட்கார்ந்து நிறைய கமென்ட் அடிக்கலாம் கிரவுண்ட்டில் இறங்கி விளையாடும்போது யோசித்து விளையாட வேண்டும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

சென்னை: கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமென்ட் அடிக்கலாம். ஆனால், கிரவுண்ட்டில் இறங்கி விளையாடும்போது யோசித்து விளையாட வேண்டும் என்று புதிதாக பதவியேற்று கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.

தமிழ்நாடு அமைச்சரவையில், புதிதாக பதவியேற்றுக்கொண்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று தலைமை செயலகம் வந்து, கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலகத்தில் 2வது மாடியில், அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாசர் அறையே டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்பேற்று கொண்டபின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம். தற்போதைய நிதித்துறை அமைச்சரின் மகத்தான பணியை நல்ல முறையில் தொடருவேன். டெல்டாவின் பாதுகாவலனாக இருப்பேன் என முதலமைச்சர் ஏற்கனவே ஆணித்தரமாக கூறியிருக்கிறார். எனவே, டெல்டா சார்ந்த தொழில்கள் அமைய வேண்டும் என்ற முதலமைச்சரின் நீண்ட நாள் கனவு நிச்சயமாக நிறைவேறும் வகையில் பணியாற்றுவேன்.

முதல்வர் வெளிநாடு பயணம் செல்லும்போது அவருடன் நானும் செல்கிறேன். தொழில் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு தான் நம்பர் ஒன் இடம் என கூறும் வகையில் சவால்களை திறம்பட எதிர்கொள்வோம். கடும் பணி சுமைகளுக்கு இடையிலேயும் முதல்வரே நேரில் வந்து பார்வையிட்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பான இடத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.கிரவுண்டுக்கு வெளியே உட்கார்ந்து நிறைய கமெண்ட் அடிக்கலாம். ஆனால் கிரவுண்ட்டில் இறங்கி விளையாடும் போது யோசித்து விளையாட வேண்டும்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவது தான் மிக முக்கியம். அதற்காகவே மாணவர்களுக்கான திறன் வளர் பயிற்சிகளை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, படிக்கும்போதே செய்து கொடுக்கும் திட்டத்தை முதல்வர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றார். முன்னதாக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post வெளியே உட்கார்ந்து நிறைய கமென்ட் அடிக்கலாம் கிரவுண்ட்டில் இறங்கி விளையாடும்போது யோசித்து விளையாட வேண்டும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,D. R. P. Raja ,Chennai ,D.R.P.Raja ,
× RELATED GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத...