×

மது குடிக்க 10 ரூபாய் தர மறுத்த ஊழியருக்கு உருட்டுகட்டை அடி: ரவுடி உட்பட 4 பேர் கைது

அண்ணாநகர்: திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(45). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். நேற்று வேலையை முடித்துவிட்டு திருச்சிக்கு செல்வதற்காக இரவு கோயம்பேடு வந்தவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த 4 பேர், செல்வராஜிடம் சென்று மது குடிக்க 10 ரூபாய் குறைகிறது. எனவே, அந்த பணத்தை கொடுங்கள்’’ என்று கேட்டபோது செல்வராஜ் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து செல்வராஜை சரமாரியாக தாக்கி அருகில் கிடந்த உருட்டுகட்டையால் தலை, நெற்றியில் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பழைய குற்றவாளிகளின் உருவம் அடையாளம் காட்டியது. இதன் அடிப்படையில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகே பதுங்கியிருந்த ரவுடி வேல்ராஜ்(எ)சொறி(40), இவரது கூட்டாளிகளான கோபிகிருஷ்ணன்(53), விஜயகுமார்(எ) வெள்ளை விஜி(48), சதீஷ்குமார்(38) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மது குடிக்க 10 ரூபாய் தர மறுத்த ஊழியருக்கு உருட்டுகட்டை அடி: ரவுடி உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Roudi ,Annagar ,Selvaraj ,Trichy District ,Roudy ,Dinakaran ,
× RELATED பெருகி வரும் மயில்களால் பயிர்கள்...