
சென்னை: பார்வையற்ற பட்டதாரி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணிக்கான ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தை சார்ந்தவர் பாப்பாத்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், முதுகலை தமிழ் பட்டாதாரி. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பாரா விளையாட்டு போட்டிகளில் பார்வையற்றோருக்கான பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். பாப்பாத்தி, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளது. நான் முதுநிலைபட்ட மேற்படிப்பு படித்துள்ளேன்.
எனவே, தனது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தனக்கு வேலைவாய்ப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை பரிவுடன் கேட்டறிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக பாப்பாத்திக்கு பணி நியமனம் வழங்கிட உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாப்பாத்திக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வெளிமுகமை மூலம் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை வழங்கினார். அப்போது இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.
* வாழ்த்து பெற்றார் திருநங்கை
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி ராஜேஸ்வரியின் பிள்ளை திருநங்கையான ஸ்ரேயா. கிருஷ்ணவேணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600க்கு 337 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். தனது மேற்படிப்புக்கு உரிய உதவிகள் செய்திடுமாறு கேட்டுக் கொண்டார். மேற்படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என அமைச்சர் உறுதியளித்தார்.
The post பார்வையற்ற பட்டதாரி பெண்ணுக்கு அலுவலக உதவியாளர் பணி ஆணை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.