×

ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.30.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை திறந்து வைத்து, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பயன்பாட்டிற்காக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவாரூர், திண்டுக்கல், தருமபுரி, நீலகிரி, நாமக்கல், கன்னியாகுமரி மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் 30 கோடியே 72 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய வாகனங்களை வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை சந்திக்க வரும் பொதுமக்கள் ஆகியோரின் வசதிக்காக, பழைய பழுதடைந்த கட்டடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் திட்டம்
2008-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான அரசால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, தற்போது வரை 277 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 205 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

* ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக வளாகக் கட்டடம் திறந்து வைத்தல்

திருவாரூர் மாவட்டம் – குடவாசல் ஒன்றியத்தில் 3 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவிலும், திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 3 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவிலும், தருமபுரி மாவட்டம் – ஏரியூர் ஒன்றியத்தில் 3 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் கடத்தூர் ஒன்றியத்தில் 3 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவிலும், நீலகிரி மாவட்டம் – கோத்தகிரி ஒன்றியத்தில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – வெண்ணந்தூர் ஒன்றியத்தில் 2 கோடியே 91 இலட்சம் ரூபாய் செலவிலும், கன்னியாகுமரி மாவட்டம் – முஞ்சிறை ஒன்றியத்தில் 3 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கு, பயிற்சி அரங்கு, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கான அறைகள், பொறியியல் பிரிவிற்கென தனி அலுவலக இடம், கணினி அறை, எழுதுபொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 17,324 சதுர அடி பரப்பளவில், இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன. திருச்சிராப்பள்ளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில், பல்வேறு அலுவலர்களுக்கான தனித்தனி அறைகளுடன் 7 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் 28,716 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் பயன்பாட்டிற்காக 200 புதிய வாகனங்கள் வழங்குதல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், அவ்வொன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகளைக் கண்காணிக்கும் பொருட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 2008-ஆம் ஆண்டில் முதன்முதலாக வாகனங்கள் வழங்கப்பட்டன.13 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வரசால் தமிழகத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் 22.4.2022 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, முதற்கட்டமாக 25 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 200 புதிய ஸ்கார்பியோ வாகனங்களை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக 12 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் (பயிற்சி) / முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் மரு. தாரேஸ் அஹமது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலாளர் டாக்டர் எம். கருணாகரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களின் பயன்பாட்டிற்கு 200 புதிய கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,Department of Rural Development and Panchayat ,Dinakaran ,
× RELATED அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு...