×

இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: கைது செய்ய அபிராமபுரம் போலீசார் முடிவு

சென்னை: இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக உள்ள விடுதலை சிகப்பி மீது அபிராமபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரத் இந்து முன்னணி மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் (43), அபிராமபுரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு புகார் அளித்தார். அதில், நான் முகநூல் மற்றும் வாட்ஸ் அப்பில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கில் ராமன், சீதா, லட்சுமி, ஆஞ்சநேயா ஆகியோரை கவிதை என்ற முறையில் வீடியோவில் மலக்குழியில் ஒரு வாரமாக அடைப்பு எடுப்பதற்கு அந்தணர்கள் எங்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அயோத்தி சென்று ராமனை அழைத்து வந்தேன் என்ற தலைப்பில் இந்து கடவுள்களை மிகவும் இழிவாக பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவை யார் பேசினார்கள் என்று பார்த்த போது, அபிராமபுரம் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள முத்தமிழ் பேரவை, ராஜரத்தினம் கலையரங்கத்தில் கடந்த 30ம் தேதி நடந்த விழா ஒன்றில் ‘விடுதலை சிகப்பி’ என்பவர் பேசியது தெரியவந்தது. ஒட்டு மொத்த இந்து மதத்தையும் இழிவுபடுத்தி பேசிய இவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றி வரும் விடுதலை சிகப்பி என்பவர் இந்து கடவுள்களை இழிவாக பேசியது வீடியோ ஆதாரங்களின்படி உறுதியானது. அதைதொடர்ந்து போலீசார் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது ஐபிசி 153, 153(1)(ஏ), 295(ஏ), 505(1),(பி), 505(2) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். மேலும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

The post இந்து கடவுள்களை இழிவுபடுத்தி பேசிய விவகாரம் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு: கைது செய்ய அபிராமபுரம் போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Ba.Ranjith ,Abhiramapuram ,CHENNAI ,Vimithya Sikappi ,
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...