×

குடிநீரில் மனிதகழிவு கலந்த விவகாரம் புதுக்கோட்டை ஜிஹெச்சில் 10 பேருக்கு ரத்த பரிசோதனை

புதுக்கோட்டை: வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்த விவகாரத்தில் டிஎன்ஏ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீரில் கலந்த மனிதக்கழிவு யாருடையது என கண்டறிவதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, நீதிமன்ற அனுமதியுடன் ஏற்பாடு செய்தனர். இவர்களில் காவலர் உட்பட 3 பேர் மட்டுமே ரத்த மாதிரிகளை கொடுத்து சென்றனர். மற்றவர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மேலும் 10 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 10 பேரும் வரவழைக்கப்பட்டனர். அங்கு தங்களது ரத்த மாதிரிகளை மருத்துவர்களிடம் கொடுத்தனர். இந்த 10 பேரில், 7 பேர் இறையூரை சேர்ந்தவர்கள், 2 பேர் வேங்கைவயல், ஒருவர் மேலமுத்துக்காட்டு பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post குடிநீரில் மனிதகழிவு கலந்த விவகாரம் புதுக்கோட்டை ஜிஹெச்சில் 10 பேருக்கு ரத்த பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Pudukottai GH ,Pudukottai ,Pudukottai Government Medical College Hospital ,Venkaiwayal ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி