×

பிளஸ் 2 தேர்வில் திருநங்கை தேர்ச்சி: 337 மதிப்பெண் பெற்றார்

பள்ளிபாளையம்: பிளஸ்2 பொதுத்தேர்வில் திருநங்கை மாணவி ஸ்ரேயா தேர்ச்சி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ரயில் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. விசைத்தறி தொழிலாளியான இவரது மகள் ஸ்ரேயா திருநங்கை. இவர் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவில், இவர் தமிழில் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணிதம் 58 மற்றும் கணினி பயன்பாட்டியலில் 59 என மொத்தம் 337 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர் தமிழ்நாட்டில் பிளஸ்2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாணவி ஸ்ரேயா கூறுகையில், ‘எனது வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் ஆகியோர் கொடுத்த ஊக்கம்தான் காரணம். வகுப்பில் என்னை யாரும் மூன்றாம் பாலினமாக வேறுபடுத்தி பார்க்கவில்லை. சக மாணவியை போலத்தான் நடத்தினார்கள். தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. மெரைன் இன்ஜினியரிங் படிக்க விரும்புகிறேன். எனது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதால், அரசு உதவி செய்ய வேண்டும்’ என்றார்.

The post பிளஸ் 2 தேர்வில் திருநங்கை தேர்ச்சி: 337 மதிப்பெண் பெற்றார் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Shreya ,Namakkal district ,Pallipalayam Kaveri ,Dinakaran ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு