×

சமாதிக்கு வந்த சசிகலாவை கண்டுகொள்ளாத டிடிவியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கடத்துவது எப்படினு பாடம் நடத்தும் அதிகாரிகளும் இருக்கிறார்களா என்ன.. விவரத்தை சொல்லேன்…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கோவை மாவட்ட குடிமைப்பொருள் பறக்கும் படை தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் ஒருவர் கலெக்‌ஷனில் படு கில்லியாம்.  மூன்றெழுத்து பெயர் கொண்ட இவர், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இதே பிரிவில் இருப்பதால், அனைத்து விஷயத்திலும் கில்லியாம். ரேஷன்  கடைகளில் மாதம்தோறும் மாமூல் வசூலிப்பாராம். தவிர, ரேஷன் அரிசி கடத்துவோருடன் கைகோர்த்து, மாமூல் வாங்கி மாளிகையே கட்டிவிட்டாராம். ஆளும், அரிசியும் பிடிபடாமல் இருக்க வழிமுறைகளை கடத்துபவர்களுக்கு இவரே கற்றுக்கொடுக்கிறார். இவருக்கு மேலதிகாரியாக இருக்கும் மாவட்ட வழங்கல் அலுவலரை சரிக்கட்டி, அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். தனது லஞ்சப்பணத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவிடுகிறார்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புரம் மாவட்ட தாமரை தலைவரை ஏன் தூக்க போறாங்களாம்… ஏதாவது ‘சம்பவம்’ அரங்கேறி இருக்கா…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் புரம் கொண்ட மாவட்டத்தின் தாமரை மாவட்ட தலைவர் மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருக்காம். மாநில நிர்வாகி ஒருவர் ஆபாச வீடியோவில் சிக்கி பதவியை ராஜினாமா செய்துள்ள விவகாரத்தில் கட்சி தலைமைக்கே அவப்பெயர் ஏற்பட்டுளளதால், தலைவர்மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதிகாத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை, தனக்கு சாதகமாக்கிக்கொண்ட தலைவர், கட்சித்தலைமையால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஒட்டுமொத்த நிர்வாகிகள், தொண்டர்களை தன்கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.  இதனால், புரம் மாவட்ட தாமரை நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்காங்க. இவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கட்சியில் இருந்து கூண்டோடு விலகப்போவதாகவும் தலைமைக்கு புகார்கள் அனுப்பி இருக்காங்க. இதுவரை ‘நோ’ ரெஸ்பான்ஸ். புரம் மாவட்டத்தில் தாமரை கரைவதை பார்த்த கட்சித்தலைமை, கட்சி ரீதியாக 2 மாவட்டங்களாக பிரித்து புதிய தலைவர்களை நியமிக்கதிட்டமிட்டுள்ளதாம்… அதாவது பெண்கள், பணம் விஷயத்தில் வீக்காக உள்ளவரை டம்மியாக்க, கட்சி ரீதியாக புரம் மாவட்டத்தை 2 ஆக பிரிக்க மாநில தலைமை முடிவு செய்துள்ளதாம். அதற்கு மாவட்ட பாஜ தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளாராம். அதை மாநில மேலிடம் கண்டுகொள்வில்லையாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குற்றவாளிகள் காக்கிகளை பார்த்து பயப்படலாம்… ஆனால் காக்கிகள் குற்றவாளிகளை பார்த்து பயந்து கோட்டை விட்ட சம்பவத்தை சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘குமரி  மாவட்டம் கருங்கல் பகுதியில்  காவல்நிலைய எல்லையில் மூன்று ஆண்டுகளுக்கு  முன்  ஒப்பந்தகாரர் ஒருவர்  வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் 4 வது  குற்றவாளி கோர்ட்டில் ஆஜர்  ஆகிவிட்டு பின்னர் தொடர்ந்து  தலைமறைவாகிவிட்டார். அவர் மீது வாரண்ட்  நிலுவையில் இருந்து வருகிறது.  ஆரல்வாய்மொழி பகுதியில் விமான பணிப்பெண்  பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில்  தொடர்புடையவர் என இருவரும்  கருங்கல் அருகே ஒரு வீட்டில் ஒன்றாக பதுங்கியிருந்தனர். பொதுமக்கள்,  இவர்களை திருடன் என நினைத்து சுற்றி  வளைத்து பிடித்து தாக்கியுள்ளனர்.  இவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேச  கடைசியில் போலீசாருக்கு தகவல்  தெரிவித்தனர். போலீசார் அவர்கள்  இருவரையும் மீட்டு கருங்கல்  காவல்நிலையம் கொண்டுவந்தனர். பின்னர்  இருவரையும் உடனேயே  விடுவித்தும்விட்டனர். அதன் பின்னர்தான் போலீசாருக்கு  இவர்கள் இருவரும்  கொலை, பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடர்புடையவர்கள்,  வாரண்ட் நிலுவையில்  இருப்பதும் தெரியவந்தது. இதுபற்றி கேட்டால்  முதலில் சாத்தான்குளம்  ‘‘லாக்-அப்’’ டெத் போன்று ஆகிவிடக்கூடாது, நாங்கள்  இவர்களை விடுவித்தால்  ஒரு சார்ஜ் மெமொ, சஸ்பென்ட் வரும். அதற்கு மன்னிப்பு கேட்டு தப்பிச்சுடலாம். ஆனால், இரண்டு கொலையாளிகளை ஸ்டேஷனில் வைத்து  அவர்களின் உயிருக்கு ஏதாவது  நேர்ந்தால் எங்களது வேலையே போய்விடும், ஜெயிலுக்கும்  போக வேண்டியதுதான், இன்று போய் நாளை வாங்கனு சொல்லி அனுப்பிட்டாங்களாம். இந்த விவகாரம்  பின்னர்  வெளிச்சத்திற்கு வர அடுத்த நாள் முதல் இருவருக்காகவும் தேடுதல்  வேட்டை  நடந்தது. அதற்கு பிறகு அவர்கள் சிக்கவே இல்லை. போலீசாருக்கு டிமிக்கி  கொடுத்து  சென்றவர்கள் அன்றே அந்த பகுதியில் உள்ள ரப்பர் குடோன் அருகே  சென்று  ரப்பர்ஷீட்களையும் திருடி சென்றுவிட்டார்களாம். இந்த புது வழக்கிற்காகவும் அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்… எல்லாம் சாத்தான் குளம் டபுள் கொலை ஞாபகம் வந்து காக்கிகளை குழப்பிவிட்டதுதான் காரணமாம்…’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘ஜெயலலிதா சமாதி டிராமா பற்றி சொல்லுங்களேன்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சசிகலா பெங்களூரில் இருந்து திரும்பிய பிறகு முதல் முறையாக ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர். ஆனால் அமமுக நிர்வாகிகள் பலர் டிடிவி தினகரனிடம் நாங்கள் செல்லவா என்று கேட்டபோது போங்கள் என்று சொல்லாமல் உங்கள் விருப்பம் என்று கூறிவிட்டாராம். ஆனால் அவரது உதவியாளராக உள்ள இரண்டு எழுத்து பிரமுகரோ சசிகலா கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதனால் சென்னையில் இருந்த செந்தமிழன் மட்டும் சென்றாராம். மற்ற நிர்வாகிகள் யாரும் செல்லவில்லையாம். சசிகலாவும் பணத்தை எடுக்காததால் பொதுமக்களை பணம் கொடுத்து கூட்டிக் கொண்டு வரவில்லையாம். இதனால் கூட்டம் குறைவாகத்தான் இருந்ததாம். சசிகலா எதிர்பார்த்ததுபோல கூட்டம் இல்லையாம். இதனால் சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா. …

The post சமாதிக்கு வந்த சசிகலாவை கண்டுகொள்ளாத டிடிவியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : DTV ,Sasikala ,Samadhi ,Peter ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...