போச்சம்பள்ளி : செல்லியம்மன் கோயில் விழாவையொட்டி, போச்சம்பள்ளி சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது.போச்சம்பள்ளியில் வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை கூடும் வாரச்சந்தை பிரசித்தம். தீபாவளி, பொங்கல், பக்ரீத், ராம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின்போது இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டும். இந்நிலையில், சுற்றுப்புற பகுதியில் உள்ள கோயில்களில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால், நேற்றைய சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. குறிப்பாக போச்சம்பள்ளியில் 18 ஆண்டுக்கு பின்பு செல்லியம்மன் கோயில் விழா நடைபெறுவதையொட்டி, ஆடுகள் வாங்க மக்கள் குவிந்தனர்.
விற்பனையும் சூடுபிடித்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்த நிலையில், போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றனர். இதனால், அனைத்து ஆடுகளும் விற்றுத் தீர்ந்தது. ஒவ்வொரு ஆடுகளும் தரத்திற்கேற்றவாறு ₹7 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் சுமார் ₹4 கோடி வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post செல்லியம்மன் கோயில் விழாவையொட்டி போச்சம்பள்ளி சந்தையில் ஆடு விற்பனை அமோகம்-₹4 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.