×

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் விடுமுறை தினமான நேற்று

திருவண்ணாமலை, மே 8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எனவே, 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருகிறது. பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் மட்டுமின்றி, தொடர் அரசு அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் முடிந்த பிறகும், திருவண்ணாமலையில் கூட்டம் குறையவில்லை. பவுர்ணமியை தொடர்ந்து, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களாக அமைந்ததால், கடந்த 2 நாட்களும் அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது.

அதன்படி, நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.சித்ரா பவுர்ணமிக்கு மேற்கொள்ளப்பட்ட தரிசன வரிசை முறையே, நேற்றும் கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, ராஜகோபுரம் வழியாக பொது தரிசனமும், திட்டி வாசல் வழியாக ₹50 கட்டண தரிசன வரிசையும் அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், கூட்டம் அலைமோதியதால், சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.மேலும், மே மாதம் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், இந்த மாதம் முழுவதும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, கோயிலில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

The post அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் விடுமுறை தினமான நேற்று appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar ,temple ,Thiruvannamalai ,Thiruvannamalai Annamalaiyar Temple ,Annamalaiyar temple ,
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை...