சென்னை: அகில இந்திய வானொலியில் இந்தி திணிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு எம்.பி. டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு டி.ஆர்.பாலு எம்பி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், அகில இந்திய வானொலியில் இந்தி திணிக்கப்படுவது தொடர்பான கடிதம் எழுதுகிறேன். ஆல் இந்தியா ரேடியோ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக ஆகாஷ்வாணி என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகில இந்திய வானொலி நிலையங்களும் கடந்த சில நாட்களாக அனைத்து ஒலிபரப்புகளிலும் ஆகாஷ்வாணி என்ற வார்த்தை மட்டுமே பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இந்த வழிகாட்டுதலானது நியாயமற்றது. தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களில் ஆகாஷ்வாணியின் தமிழுக்கு சமமான வானொலி என்ற பெயரை பயன்படுத்தி வருகின்றனர். இது பழைய முடிவு என்று பிரசார் பாரதி கூறினாலும், அகில இந்திய வானொலி நிலையங்கள் இதை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சரியானது அல்ல, ஏற்றுக்கொள்ள முடியாதது.பிரசார் பாரதியின் செயலுக்கு தமிழகம் மற்றும் பிற இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து அதற்கு பதிலாக இந்தியைத் திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கைக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அகில இந்திய வானொலி என்ற பிரபல பெயரைக் கைவிடும் பிரசார் பாரதியின் முடிவுக்கு திமுக சார்பிலும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு பிரசார் பாரதிக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வானொலியில் இந்தி திணிப்பு; திமுக கண்டனம்: ஒன்றிய அமைச்சருக்கு டி.ஆர்.பாலு கடிதம் appeared first on Dinakaran.