
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடல் மணல் திட்டில் படகோட்டிகளால் இறக்கி விடப்பட்ட இலங்கை அகதிகளான 3 குடும்பத்தை சேர்ந்த 10 பேரை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர். இலங்கை தலைமன்னார் கடற்கரையில் இருந்து, ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் இரவில் 10க்கும் மேற்பட்டோர் அகதிகளாக கிளம்பி வந்தனர். இவர்களை படகில் ஏற்றி வந்தவர்கள், தனுஷ்கோடி முதல் மணல் திட்டில் இறக்கி விட்டு திரும்பிச் சென்று விட்டனர். இரவு முழுவதும் நடுக்கடலில் தவித்த அகதிகள் குறித்து, இப்பகுதி மீனவர்கள், மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மரைன் போலீசார், இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மண்டபத்தில் இருந்து ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்ற இந்திய கடலோர காவல் படையினர் முதலாம் மணல் திட்டில் இருந்த ஒரு குழந்தை, இரண்டு சிறுவர்கள் உட்பட 10 பேரை மீட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.
மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களிடம் விசாரணை செய்ததில், இலங்கை முல்லைத்தீவை சேர்ந்த சாருஜன்(23), இவரது மனைவி அம்பிகா(23), ஒரு வயது மகன் மற்றும் சசிகுமார்(43), இவரது மனைவி கலைச்செல்வி (38) இவர்களது பிள்ளைகள் 17, 5 வயது மகன்கள் மற்றும் அக்கினேஸ்வர்(75), இவரது மகள் யானுஜா(32), இவரது 9 வயது மகள் என்று தெரிந்தது. மூன்று குடும்பத்தினரும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு நேற்று அதிகாலை 2 மணியளவில் மணல் திட்டில் வந்து இறங்கியதாக தெரிவித்தனர். மேலும் படகில் தனுஷ்கோடி வருவதற்கு படகு கட்டணமாக ரூ.1.50 லட்சம் பணம் கொடுத்ததாகவும் போலீசாரிடம் கூறினர். விசாரணையை தொடர்ந்து இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 10 பேர் வருகை: மணல் திட்டில் தவித்தவர்கள் மீட்பு appeared first on Dinakaran.