×

பழுதடைந்த தென்கரை வாய்க்கால் பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை: குளித்தலை தாலுக்கா கே.பேட்டை ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே செல்லும் தென்கரை வாய்க்கால் பாலம் பழுதடைந்த நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை இருப்பதால் புதிய பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பேட்டை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கே.பேட்டை, திம்மாச்சிபுரம், அக்ரஹாரம், வீரவல்லி, ஐநூற்று மங்களம், சீகம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகள் உள்ளது. மேலும் கே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் திருச்சி கரூர் மெயின் ரோடு அருகே உள்ளது. அதன் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. எதிரே பஸ் நிறுத்தம் உள்ளது.

இதனால் தினந்தோறும் ஏராளமானோர் இப்பகுதியில் உள்ள தென்கரை பாசன வாய்க்கால் பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், இப்பகுதியில் ரயில் நிலையம் இருப்பதால் காலை, மாலை பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.இங்கு விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் இப்பாலத்தை கடந்து நெல் அறுவடை செய்யும் பொழுதும், வாழைத்தார் வெட்டும் பொழுதும் இந்த பாலத்தின் அருகே மெயின் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி எதிர்புறம் பகுதியில் இருந்து தலையில் சுமந்து கொண்டு பாலத்தை கடந்து வாகனத்தில் ஏற்றுவதற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இல்லை என்றால் வாகனங்களை மூன்று கிலோ மீட்டர் சுற்றி வந்து வயல் பகுதியில் அருகில் வைத்து வாழைத்தாரையோ, நெல் அறுவடையோ செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது.
பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களும் இந்த 37 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழுதடைந்த நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித அசம்பாவிதமும் நிகழும் முன் புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழுதடைந்த தென்கரை வாய்க்கால் பாலம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : TALUKKA K. ,Pavement Forum ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!