செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக, ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 2022-2023ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவோர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தில், 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த தொழில் முனைவேரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில், உறைவிப்பான், குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு வயது வரம்பு 18 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
திட்டத்தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியமும் மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கு திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியம் அளிக்கப்படும்.
இத்திட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் புகைப்படம் மற்றும் ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
