×

பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் தங்கக்குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் அழகர் நேற்று இறங்கினார். மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதுரை சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 2ம் தேதி மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 3ம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. வைகையாற்றில் அழகர் இறங்கும் பிரசித்தி பெற்ற வைபவம் நேற்று நடந்தது. முன்னதாக அழகர்கோவிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த மே 3ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது.

* 456 மண்டகப்படிகளில்…
தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ் லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 456க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அழகர் காட்சி அளித்தார். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அழகருக்கு சூட்டப்பட்டது.

* பொன் சப்பரத்தில் ஏறி…
நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் அழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு அழகர் புறப்பட்டார். அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு அழகர் வந்தார். அதிகாலை 4 மணிக்கு மதுரை தெற்குவாசல் வீரராகவ பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த அழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார்.

* பச்சைப்பட்டு உடுத்தி…
வைகை ஆற்றில் அழகர் இறங்குவதைக் காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். வைகை ஆற்றின் கரையோரம், ஆற்றுப்பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்களின் தலைகளே தென்பட்டன. வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் பச்சைப்பட்டு உடுத்தி மதுரை வைகையாற்றில் அதிகாலை 5.52 மணிக்கு இறங்கினார். அப்போது மழையையும் பொருட்படுத்தாமல் அங்கு கூடி இருந்த பல லட்சம் பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா…’ என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி அழகருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். வைகை ஆற்றில் இறங்கிய அழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.21 மணிக்கு புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார்.

* தீர்த்தவாரி…
பகல் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் அழகர் எழுந்தருளினார். அழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி ஏடிஜிபி சங்கர் தலைமையில், 10 எஸ்பிக்கள் மற்றும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், தீயணைப்புத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், நிலைய அதிகாரிகள் பாண்டி, விருதுநகர் நிலைய அதிகாரி கணேசன், அழகர்கோவில் தக்கார் வெங்கடச்சலம், அழகர்கோவில் துணை கமிஷனர் ராமசாமி, மீனாட்சியம்மன் கோயில் துணை கமிஷனர் அருணாச்சலம், திருப்பரங்குன்றம் கோயில் துணை கமிஷனர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* மண்டூக முனிவருக்கு இன்று சாப விமோசனம்
இன்று காலை 6 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில், அழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில், 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். மதியம் 3.30 மணிக்கு அனுமார் கோயிலுக்கு அழகர் வருகிறார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.

* அழகர் மலைக்கு 8ம் தேதி பயணம்
அழகர் நாளை (மே 7) காலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் இருந்து அழகர் மலைக்கு புறப்படுகிறார். 9ம் தேதி மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 20ம் தேதி மதியம் 12.05 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் இருப்பிடம் அடைகிறார்.

The post பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் அழகர்: மழையிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Alaghar ,Vaigai ,Madurai ,Alakar ,Vaigayaar ,Madurai Chitrai festival ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...