×

கீழவல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி பணிகள் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

செய்துங்கநல்லூர், மே 5: கீழவல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளிக்கான ஆரம்பக்கட்ட பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை இந்திய அளவிலான நுழைவு தேர்வுகளுக்கு தயார் செய்யும் விதமாக அரசு மாதிரி பள்ளிகளை கடந்த செப்.5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு எவ்வித போட்டி தேர்வுகளையும், நுழைவு தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு திறன்மிக்க ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.

ஆர்வமும், திறமையும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்க தற்போது 25 மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி என உருவாக்கப்பட உள்ளது. இதற்காக வரும் நிதியாண்டில் பள்ளிக்கல்வி துறை சார்பில் சுமார் 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி, கீழவல்லநாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ- மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வகுப்பறைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.
வைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினா, நேர்முக உதவியாளர் கணேசன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெய, அரசு மாதிரி பள்ளி முதல்வர் கஜேந்திர பாபு, உதவி திட்ட அலுவலர் மரியசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்படுகிறது. இப்பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கப்பட உள்ளது. 9ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 10ம் வகுப்பில் 160 மாணவ, மாணவிகளும், 11ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 240 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 800 மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில் இப்பள்ளி தொடங்கப்பட உள்ளது. இந்த மாதிரி பள்ளி உண்டு உறைவிட பள்ளி என்பதால் மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 400 மாணவர்களுக்கு ஒரு விடுதியும், 400 மாணவிகளுக்கு ஒரு விடுதியும் செயல்பட உள்ளது.

அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பையும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பை உறுதி செய்தலும், சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை மெருகேற்றி இணை கல்விச் செயல்களை மேம்படுத்துதலும், ஒவ்வொரு மாணவ- மாணவிகளுக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும், என்றார்.

இந்த கல்வியாண்டே வகுப்புகள் துவங்கும்
கீழவல்லநாடு அரசு மாதிரி பள்ளியில் முதற்கட்டமாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தொடங்கப்பட உள்ளது. 400 மாணவர்கள், 400 மாணவிகள் என மொத்தம் 800 பேர், இங்கு பயில தேர்ந்தெடுக்கப்படுவர். தற்போது அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ- மாணவிகளில் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு மாதிரி பள்ளிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இலவச தங்கும் வசதியுடன் இந்திய அளவிலான அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான பயிற்சி அளிக்கப்படும். இந்த கல்வியாண்டு முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

The post கீழவல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி பணிகள் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Senthilraj ,Geezavallanath ,Karinganallur ,Model School ,Keezhavallanath ,Model ,Dinakaran ,
× RELATED வல்லநாட்டில் கட்டி முடித்து 6...