×

வேட்பு மனுவில் தவறான தகவல் எடப்பாடி மீது போலீஸ் வழக்குபதிவு: உயர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: வேட்புமனுவில் தவறான தகவல் தந்ததாக இபிஎஸ் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி தேர்தல் வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து மே 26ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, மே 26ம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டுமென்று மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், இந்த மனுவை தாக்கல் செய்த பிறகு அவசர கதியில் மனுதாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு அதுவரை இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தி விசாரணையை வரும் ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post வேட்பு மனுவில் தவறான தகவல் எடப்பாடி மீது போலீஸ் வழக்குபதிவு: உயர் நீதிமன்றத்தில் தகவல் appeared first on Dinakaran.

Tags : edapadi ,Chennai ,EPS ,Edapati ,Dinakaran ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு