சென்னை: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவிகள் 2023-24ம் நிதியாண்டில் பெற தேவையான விண்ணப்பங்கள்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி பெற விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கீழ்க்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை கல்வி படிப்பவராகவோ அல்லது முதுநிலைக்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு முடித்தோர் டெட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருக்க வேண்டும். பிரெய்லி எழுத்துகளை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். எனவே, பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி பெற விரும்பும் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், பிரெய்லி முறையில் கல்வி பயின்றதற்கான சான்று, இளங்கலை கல்வி பயில்வதற்கான அல்லது முதுநிலை கல்வி பயில்வதற்கான சான்று அல்லது பட்டப்படிப்பு முடித்து டெட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுக்கு செல்வதற்கான சான்று, ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
The post மின்னணு முறையில் பிரெய்லி எழுத்துகளை வாசிக்கும் கருவி பெற விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.