×

தி.நகர் ரங்கராஜன் சுரங்கப்பாதையில் தோழியுடன் சென்றவரை வெட்டி செல்போன்கள் பறிப்பு: 3 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: மாம்பலம் ஆர்.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (40), பெயின்டரான இவர், பணிமுடிந்து நேற்று முன்தினம் இரவு தோழியான வீட்டு வேலை செய்து வரும் கமலா தேவியுடன் பேசியபடி தி.நகர் ரங்கராஜன் சுரங்கப்பாதை வழியாக நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால், ரங்கராஜன் சுரங்கப்பாதை வழியாக வாகனம் ஏதுவும் வரவில்லை. அந்த நேரத்தில் பைக்கில் வந்த 3 பேர், கமலா தேவியிடம் கத்தி முனையில் செல்போனை பறித்தனர். அப்போது பெயின்டர் முத்துகுமார் அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அவர்கள், கத்தியால் முத்துக்குமாரின் தலையில் பலமாக வெட்டிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கமலா தேவி மீட்டு தனியார் மருத்து வமனையில் அனுமதித்தார்.

இதுகுறித்து பாண்டிபஜார் காவல் நியைத்தில் கமலாதேவி புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி பதிவுகளை பெற்று தப்பி ஓடிய 3 வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: அயனாவரத்தை சேர்ந்தவர் இம்ரான்கான் (31). இவர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பொம்மை வியாபாரம் செய்துவிட்டு நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து பஸ் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார். இதன்பிறகு, தனது வீட்டுக்கு செல்வதற்காக கோயம்பேடு 100 அடி சாலை வழியாக செல்போனில் பேசிக்கொண்டு சென்றார். அப்போது அங்குவந்த ஒரு வாலிபர், இம்ரான்கானிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ‘‘திருடன் திருடன்’’ என்று கூச்சலிட்டதால், பொதுமக்கள் விரட்டி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், அவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வா (எ) செல்வகுமார் (21) என்பதும், இவர்மீது செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தி.நகர் ரங்கராஜன் சுரங்கப்பாதையில் தோழியுடன் சென்றவரை வெட்டி செல்போன்கள் பறிப்பு: 3 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : D. Nagar Rangarajan ,Chennai ,Mambalam ,Muthukumar ,Garden ,
× RELATED தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை...