கொடைக்கானல் : தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை விடுமுறை என்பதால் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள பிக்னிக் ஸ்பாட்கள் அனைத்திலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பாம்பார்புரம் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சிகளில் கொட்டும் நீரை ரசித்து செல்கின்றனர். மேலும் கடந்த 2 தினங்களாக கொடைக்கானலில் மேகமூட்டம் மற்றும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனால் பகலில் நிலவிய வறண்ட சூழல், குளிர்ச்சியாக மாறி உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போது கொடைக்கானல் நகரில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பகல் முழுவதும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post அருவிகள் ஆர்ப்பரிப்பு சுற்றுலா பயணிகள் ரசிப்பு appeared first on Dinakaran.