×

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் இளம் தம்பதி கைது; தனிப்படை போலீஸ் அதிரடி..!!

கோவை: பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். கேரளாவில் பதுங்கியிருந்த சுஜய், அவரது மனைவி ரேஷ்மா இருவரையும் தனிப்படை போலீஸ் கைது செய்தது. கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுஜய். ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். இதனிடையே, ரேஷ்மாவை திருமணம் செய்த சுஜய், 6 ஆண்டுகளாக கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுப்புலெட்சுமி என்ற 20 வயது கல்லூரி மாணவியுடன் காதலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சுப்புலெட்சுமிக்கே தெரியாமல் சுஜய் ரேஷ்மாவை திருமணம் செய்துள்ளார். ரேஷ்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், பிரசவத்திற்காக கேரளாவில் உள்ள தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர், சுப்புலெட்சுமியின் தொடர்பை துண்டிப்பதற்காக சுஜய் பொள்ளாச்சி வந்துள்ளார். சுஜயை தேடி கல்லூரி மாணவி சுப்புலெட்சுமி, சுஜய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, என் வாழ்க்கையே நாசம் பண்ணிட்டியே என சுப்புலெட்சுமி சுஜயிடம் கதறியுள்ளார். இதனால் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியுள்ளது.

சிறிது நேரத்தில் சுஜய் வீட்டிலிருந்து பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதால், அருகில் வசித்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். அங்கு சுப்புலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் சுப்புலட்சுமி உடலை மீட்டனர். சுப்புலட்சுமியின் உடலில், பல இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சுஜய் தலைமறைவாகிவிட்டார். நேற்று சுஜய்யின் தாயாரை போலீசார் பொள்ளாச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 3 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்த நிலையில் தற்போது கேரளாவில் பதுங்கி இருந்த சுஜய் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலையில் இளம் தம்பதி கைது; தனிப்படை போலீஸ் அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : Pollachi College ,COVAY ,Sujay ,Kerala ,Reshma ,
× RELATED முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆதரவாளர் வீடு ஆபீசில் 4வது நாளாக ரெய்டு