×

செம்பியம் லாட்ஜில் பரபரப்பு போதையில் மயங்கி விழுந்த ரயில்வே ஊழியர் மரணம்: கேரளாவிலிருந்து சிகிச்சை பெற வந்தவர்

பெரம்பூர், மே 4: கேரளாவிலிருந்து பெரம்பூருக்கு சிகிச்சை பெற வந்தபோது, லாட்ஜ் வாசலில் போதையில் மயங்கி விழுந்து ரயில்வே ஊழியர் உயிரிழந்தார். இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் பாலக்காடு வித்யூத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சசிபூஷன் (41). இவர் தெற்கு ரயில்வேயில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து சசிபூஷன் தங்கியுள்ளார். நேற்று காலை 10 மணியளவில் முழு போதையில் அறையில் இருந்து வெளியே வந்து, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அவரை லாட்ஜ் மேனேஜர் ராஜ் அழைத்து வந்து வெளியே அமர வைத்துள்ளார். 11 மணியளவில் திடீரென்று சசிபூஷன் மயக்கம் அடைந்தார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு வந்து அவரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சசிபூஷனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், சசிபூஷன் குடிபோதைக்கு அடிமையாகி பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், ஏற்கனவே அவருக்கு பல உடல் உபாதைகள் இருந்துள்ளன. சிகிச்சை பெற வந்த இடத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் இறப்புக்கான முழு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

The post செம்பியம் லாட்ஜில் பரபரப்பு போதையில் மயங்கி விழுந்த ரயில்வே ஊழியர் மரணம்: கேரளாவிலிருந்து சிகிச்சை பெற வந்தவர் appeared first on Dinakaran.

Tags : Sembiam Lodge ,Kerala ,Perampur ,Sembium Lodge ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...