×

வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போடும்போது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப பலி: மேலும் இருவர் உயிரிழப்பு

பல்லாவரம், மே 4: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், சுப்பிரமணிய பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜா. சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தேவி (44). தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் இருந்த தேவி, நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் போட்டுள்ளார். அப்போது தண்ணீரில் கையை விட்டு வாட்டர் ஹீட்டரை எடுத்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து தேவி தூக்கி வீசப்பட்டார்.

இதனிடையே தேவியின் தம்பி, எதேச்சையாக அக்காவுக்கு போன் செய்தபோது, நீண்ட நேரமாக தேவி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், தேவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மின்சாரம் பாய்ந்து தேவி மயங்கிக் கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தேவியை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு, தேவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தேவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயனாவரம் மதுரை தெருவை சேர்ந்தவர் சரத்பாபு (41), எலக்ட்ரீசியன். நேற்று மதியம் ஒரு மணியளவில் பெரவள்ளூர் சித்தரஞ்சன் காலனி, திருவள்ளுவர் தெருவில் புதிய ஜெராக்ஸ் கடையில் வயரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் சரத்பாபு தூக்கி வீசப்பட்டார். உடனடியாக கடையின் உரிமையாளர் வேலு உள்ளிட்ட ஊழியர்கள் சரத்பாபுவை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெரவள்ளூர் போலீசார் சரத்பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். உயிரிழந்த சரத்பாபுவுக்கு ரீனா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

 பீகாரை சேர்ந்தவர் முகமது ஷான்வாத் (22). சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த தனியார் கட்டுமான கான்ட்ராக்டரிடம் பணியாற்றி வந்தார். சித்தாலப்பாக்கம், விவேகானந்தர் நகர், 3வது குறுக்கு தெருவில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது. அங்கு முகமது ஷான்வாத் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கட்டிடத்தில் மின்விளக்கு சுவிட்ச்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே சாய்ந்தார். இதை பார்த்த சக தொழிலாளிகள் உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து, பெரும்பாக்கம் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post வாட்டர் ஹீட்டரில் வெந்நீர் போடும்போது மின்சாரம் பாய்ந்து பெண் பரிதாப பலி: மேலும் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Subramaniya Bharati Street ,Anakaptur ,Chennai ,
× RELATED ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி