திருமயம்: புதுக்கோட்டை அருகே நேற்று நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 2 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் அரியநாயகி அம்மன் கோயில் செவ்வாய், மது எடுப்பு திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 800 காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள், மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் விழா கமிட்டியினர் திணறினர். இதில் வாகனத்தில் ஏற்றி வந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் ஆங்காங்கே அவிழ்த்து விட தொடங்கினர். இதனால் மஞ்சுவிரட்டு திடல் முழுவதும் காளைகள் நாலாபுறமும் மிரண்டு ஓடின.
காளைகளை அப்பகுதி இளைஞர்கள் விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். ஒருசில காளைகள் அப்பகுதி இளைஞர்களிடம் பிடிபட்ட நிலையில், பெரும்பாலான காளைகள் தப்பித்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்து முட்டியதில் அரிமளம் அருகே கே.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன்(35), பாதுகாப்பு பணியில் இருந்த மீமிசல் காவல் நிலைய போலீஸ்காரர் நவநீதகிருஷ்ணன்(31) உட்பட 65பேர் படுகாயமடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சுப்ரமணியன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் இறந்தனர்.
The post புதுக்கோட்டை அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளை முட்டி போலீஸ்காரர் உட்பட 2 பேர் பலி: 63 பேர் படுகாயம் appeared first on Dinakaran.