சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மால் டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை கடையை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, ‘‘திமுக ஆட்சி அமைத்த 2 ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் சில பத்திரிகைகள் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவதுபோல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது.
இந்த மாலில் உள்ள கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரைதான் செயல்படுகின்றன. கடைகளுக்குள் அந்த தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதா, அல்லது வெளியே பொருத்தப்பட்டுள்ளதா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.அதிமுக ஆட்சியில் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன. டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளைக் கொண்டு உண்மைத் தன்மையை ஆராயாமல் செய்தி வெளியிட வேண்டாம். டாஸ்மாக் நிறுவனம் மூலம் வரும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்துவது போன்று சித்தரித்து செய்தி வெளியிடும் பத்திரிகை, தொலைக்காட்சி, செய்தி நிறுவனம், சமூக வலைத்தளம் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.
The post தவறான செய்தியை வெளியிட்டால் நடவடிக்கை டாஸ்மாக் வருமானம் மூலம் ஆட்சி நடத்தும் அவசியமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.