- சித்ராய் திருவிழா
- கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில்
- கோவில்பட்டி
- நாடார்
- சங்க
- கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா
கோவில்பட்டி, மே 3: கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட யானை முன் செல்ல நாடார் உறவின் முறை சங்க தலைவர் பழனிசெல்வம், கோயில் தர்மகர்த்தா மாரியப்பன் மற்றும் நிர்வாக குழுவினர், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் மங்களப் பொருட்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் பெண்கள் மஞ்சள் பால், புனித நீர் கொடி மரத்திற்கு ஊற்றி வழிபட்டனர்.
விழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா வருதல், பக்தி சொற்பொழிவு, இரவு 8 மணிக்கு கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் நடக்கிறது. வருகிற 9ம் தேதி காலை 9 மணிக்கு நந்தவனத்தில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி, 10 மணிக்கு பாலாபிஷேகம், தீபாராதனை, மாலை 5 மணிக்கு பெண்கள் மாவிளக்கு ஏந்தி ஊர்வலமாக வருதல், 5.30 மணிக்கு 51 அக்னி சட்டி எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு அம்மன் தங்க குடம், வாள் ஏந்தி தீர்த்தம் எடுக்கும் கோலத்தில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10ம் தேதி காலையில் பொங்கலிடும் நிகழ்ச்சி, மாலை 3 மணிக்கு கோயில் முன்பு மஞ்சள் நீராட்டு விழா, 6 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பல்லக்கில் கோயிலை சுற்றி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் தேதி இரவு 9 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, 12ம் தேதி மாலை 6 மணிக்கு 1,008 விளக்கு பூஜை நடைபெறுகிறது.
The post கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.