திருப்போரூர்: திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் வெங்கூர் கிராமம் உள்ளது. இங்கு, சென்னையை சேர்ந்த வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கிருந்து 3,500 லிட்டர் டீசலை ஏற்றிக் கொண்டு மினி டேங்கர் லாரி ஓஎம்ஆர் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு சென்றது. சிறுங்குன்றம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (35). டேங்கர் லாரியை ஓட்டிச் சென்றார். திருப்போரூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது டேங்கர் லாரிக்கும், டிரைவர் கேபினுக்கும் இடையில் திடீரென புகை வந்ததுள்ளது.
இதையடுத்து, டிரைவர் குணசேகரன் டேங்கர் லாரியை ஓரமாக நிறுத்தினார். அப்போது, புகை வந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக சுதாரித்த டிரைவர் குணசேகரன் லாரியில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு வந்து உடனடியாக தீயை அணைக்க முயன்றார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் தீயணைப்பு படையினர் வந்து தீணை அணைத்தனர். டிரைவரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 3,500 லிட்டர் டேங்கர் லாரிக்குள் தீ பரவி இருந்தால் மிகப்பெரிய அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
வாகனத்தின் பேட்டரி பகுதியில் முதலில் தீ ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வாகனத்தில் இருந்த பேட்டரி வயர்கள் கழற்றப்பட்டு சென்னையில் இருந்து கம்பெனி மெக்கானிக்குகள் வந்து வாகனத்தின் பேட்டரியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். மேலும், இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரியில் தீ appeared first on Dinakaran.