×

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1.33 லட்சம் வழக்குகள் தீர்வு: போக்குவரத்து போலீசார் தகவல்

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மோட்டர் வாகன சட்டத்தை திறம்பட அமல்படுத்துவதன் மூலமும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சென்னை பெரு நகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக சராசரியாக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.

இருப்பினும் சில விதிமீறல் செய்பவர்கள் அபராதத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. எனவே 10 அழைப்பு மையங்கள் மூலம் விதிமீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியின் மூலம் அழைப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் கடந்த 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை கடந்த ஒரு வாரத்தில் 169 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 204 வழக்குகள் உட்பட 10,363 வழக்குகள் தீர்வு காணப்பட்டு இணையதளம் வாயிலாக ரூ.51,39,020 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது.

மேலும் போக்குவரத்து விதிமீறுபவர்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கு கீழ் நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையினை கிரெடிட், டெபிட் கார்டு, க்யூஆர் குறியீடு அல்லது ஆன்லைன் பேமெண்ட் அபராதத்தைச் செலுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் நிலுவையில் இருந்த சுமார் 1,33,100 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.5,42,53,360 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் இது ஒரு துன்புறுத்தல் என்று பாராமல், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை செலுத்துவதற்கான விழிப்புணர்வு என்பதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1.33 லட்சம் வழக்குகள் தீர்வு: போக்குவரத்து போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Traffic Police ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...