×

எழும்பூர்-மதுரை இடையே ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்க திட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: எழும்பூர்-மதுரை இடையே 130 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைத்தல், வளைவுகளை குறைத்தல் உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த வழித்தடங்களில் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள, 53 முக்கிய வழித்தடங்களில் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ., ஆக அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.

சென்னை எழும்பூர்-மதுரை, திருவனந்தபுரம்-கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சென்னை-மதுரை ரயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். மேலும் ரயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும். 130 கி.மீ. வேகத்தை ரயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரக்கோணம்-மைசூர், ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர், கண்ணூர்-கோழிக்கோடு, திருவனந்தபுரம்-மதுரை, ஜோலார்பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.

சென்னை-பெங்களூரு-மைசூர் வந்தே பாரத் ரயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை-ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஜோலார்பேட்டை-பெங்களூரு, பெங்களூரு-மைசூர் வழித் தடத்தில் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும். தெற்கு ரயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத்துக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. ரயில்களின் வேகம் அதிகரிப்பது மூலமாக, பயண நேரம் குறைகிறது. இதுபோல பலவழித்தடங்களில் ரயில்வே தண்டவாளம் மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறகிறது.

The post எழும்பூர்-மதுரை இடையே ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்க திட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Egmore-Madurai ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்