×

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜ மேலிடம் முடிவு எடுக்கும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: அரசியல் என்பது கண்ணாடி மாதிரி. இது எல்லாவற்றையும் மனதில் கொண்டு கூட்டணி குறித்து மேலிடம் முடிவு எடுக்கும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ 100-வது நிகழ்ச்சி நேற்று நாடு முழுவதும் ஒலிபரப்பானது. சென்னை மெரினா நடுக்குப்பத்தில் தமிழக பாஜ மாநில செயலாளர் எஸ்.சதீஷ்குமார் தலைமையில் ‘மனதின் குரல்’ 100வது நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செய்தி தொடர்பாளர் சைனி, சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், செயற்குழு உறுப்பினர் நடிகை நமீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் சிறப்பு குறித்து பிரதமர் பாராட்டிய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு நூலாக வெளியிடப்பட்டது. இந்த நூலை சுதாகர் ரெட்டி வெளியிட நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 எம்பிக்களுடன் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வருவார். இந்த கூட்டணிக்கு தலைமை பற்றி பேசுவதில், எனக்கு நம்பிக்கை இல்லை. கூட்டணியில் அதிமுக பெரிய கட்சி. ஆனால், கூட்டணியின் முகம் மோடி தான். எனவே, பாஜவுக்கு சமமான மரியாதை நிச்சயம் இருக்க வேண்டும்.

எனக்கான பாதையை பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும், நட்டாவும் வகுத்து தந்திருக்கிறார்கள். ‘அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்று எனக்கு கோடு போட்டு கொடுத்திருக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அந்த அதிகாரம் தேசிய தலைமைக்கு தான் உண்டு. அவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு எடுப்பார்கள்.

அந்த முடிவு எடுக்கும் போது, கூட்டணி கட்சி தலைவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அதே வேளை சில தலைவர்கள் மோடியுடன் பயணித்திருக்கிறார்கள். அவர்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. அதேவேளை இன்னொரு கட்சியையும் சங்கடப்படுத்த முடியாது. அரசியல் என்பது கண்ணாடி மாதிரி. இது எல்லாவற்றையும் மனதில் கொண்டு கூட்டணி குறித்து முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பாஜ மேலிடம் முடிவு எடுக்கும்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja ,Anamalai ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...