சேலம்: சேலம் மல்லூர், நங்கவள்ளி, காரிப்பட்டி பகுதியில் சைக்கிள் ஸ்டாண்டுகளில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 43 டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சைக்கிள் ஸ்டாண்டுகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று கிடக்கும் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களை 102 சட்டப்பிரிவின் கீழ் பறிமுதல் செய்து, அரசின் கணக்கில் கொண்டு வர போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்பேரில், மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் இருக்கும் சைக்கிள் ஸ்டாண்டுகளில் போலீசார் சோதனை நடத்தி, ஓராண்டிற்கு மேலாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தவகையில், சேலத்தை அடுத்த மல்லூர் பகுதியில் உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் எஸ்ஐ தங்கவேல் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஓராண்டிற்கும் மேலாக கேட்பாரற்று கிடந்த 20 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், காரிப்பட்டி பகுதியில் உள்ள ஸ்டாண்டில் எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, கேட்பாரற்று கிடந்த 14 டூவீலர்களை பறிமுதல் செய்தார்.
நங்கவள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்டாண்டில் போலீசார் சோதனை நடத்தியதில், ஓராண்டிற்கும் மேலாக யாரும் உரிமை கோரி வராமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 9டூவீலர்கள் கைப்பற்றப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3 இடங்களிலும் 43 டூவீலர்கள் பறிமுதலாகியுள்ளது. இந்த வாகனங்களை முறையாக அரசு உத்தரவுபடி ஏலம் விட்டு, அதன் வருவாய்த் தொகையை அரசின் கருவூலத்தில் சேர்க்கவுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post சேலம் மல்லூர், நங்கவள்ளி, காரிப்பட்டியில் ஸ்டாண்டுகளில் கேட்பாரற்று கிடந்த 43 டூவீலர்கள் பறிமுதல் appeared first on Dinakaran.