×

மாவட்டத்தில் பரவலாக மழை அருப்புக்கோட்டை, சாத்தூர், வத்திராயிருப்பில் கனமழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சாத்தூர், ஏப்.30: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் வத்திராயிருப்பில் கனமழை கொட்டியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சாத்தூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவும், மாலையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்வதுமாக இருந்து வந்தது. நேற்றும் வழக்கம் காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கினர். இந்த நிலையில் மதியம் முதல் சாத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. பின்னர் குளிர்ந்த காற்று வீசியது. தூறலாக துவங்கிய மழை, கனமழையாக மாறியது. அரை மணி நேரம் வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஒரு மணி நேரம் நல்ல மழை பெய்தது.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மற்றும் சுற்றியுள்ள மகாராஜபுரம், தம்பிபட்டி, கூமாபட்டி, ராமச்சந்திராபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை முக்கால் மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்தனர். இருப்பினும் இந்த மழையால் கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காற்று வீசியதல் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. நண்பகல் 12 மணி அளவில் சாரலாக துவங்கிய மழை, பின்னர் பலத்த மழையாக மாறியது. மாலை 5 மணி வரை விட்டு விட்டு பெய்த மழையால், அருப்புக்கோட்டை நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தவிர விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளிலும் சாரலாக மழை பெய்த வண்ணம் இருந்தது.

The post மாவட்டத்தில் பரவலாக மழை அருப்புக்கோட்டை, சாத்தூர், வத்திராயிருப்பில் கனமழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Arapukkota ,Satur ,Vadruyirip ,Virudhunagar district ,Vaduriripe ,Sattur ,
× RELATED மகளிர் உரிமை தொகை பிரேமலதா பாராட்டு